நல்லுர் கந்தன் கீர்த்தனைகள்
பல்லவி
பக்தி செய்திடும் பக்தர்கள் உள்ளங்களில்
பக்தனாகி உறைந்திடும் நல்லூர் முருகா
அனுபல்லவி
முருகா என ஒரு தரம் அழைத்தால்
முறுவலுடன் வந்து தரிசனம்தருவாய்
வள்ளி தெய்வானை விரும்பிடும் மணாளா
தெள்ளு தமிழ் கடவுளே கந்தா முருகா
சரணம்
ஏழ்திசையும் போற்றும் குறுஞ்சி மலை வாழும்
ஏற்றமிகு வாழ்வு கொண்ட குறத்தி மணாளா
குன்றுமேலுறையும் குறுஞ்சி மலை தெய்வமே
குன்றுதோறாடும் குமரக் கடவுளே கந்தா
முன்னைவினை நீக்கி முத்திநெறி காட்டும்
மூலப் பொருளே முக்கண்ணன் மைந்தனே
வேழமுகத்தோன் உடன் பிறந்த இளையவனே
வேலொடு மயிலில் விற்றிருக்கும் கந்தா
பாடு பாடு எனெப் பலமுறை கூறியும்
பரம்பொருள் புகழை பாடிட முடியவில்லை
பன்னிருகரங் கொண்ட வள்ளலின் பெருமையால்
பாமரன் பாடினேன் வள்ளல் புகழினை
வாழி வாழி வண்ணமயில் வாகனா
வாழி வாழி குன்றுதோறாடும் தலைவா
சரணம் சரணம் அடியேன் சரணம்
சரணம் சரணம் சரவண பவகுகா
--------------------------------------------------------
பல்லவி
தமிழ் பாடும் உலகிலே தலையாய தெய்வமாய்
மகிழ்வோடு பாடவே மனதார வேண்டினேன்
அனு பல்லவி
நல்லுர் பதியிலே நயமாய் குடி கொண்டு
வேலோடு வினை தீர்க்கும் வேலவா கந்தா
சரணம்
சேவற்கொடியோனே செந்தமிழ் திருத்தேனே
பாவ வினை தீர்க்கும் பன்னிரு விழியோனே
காவலாய் நல்லூரில் காத்திருக்கும் குமரோனே
தேவர் மகிழ் குமரா தெய்வத்திரு மகனே
-------------------------------------------------------------------------------
பல்லவி
வாயார நினது புகழ் பாட வந்தேன்
வண்ணக் கவிதையால் புகழு கின்றேன்
அனு பல்லவி
என்னுள் குடிகொண்ட நல்லூர் கந்தனே
என்னையும் அறியாது என்னுள்ளே புகுந்தாயே
சரணம்
செந்தமிழ் பாட்டினில் கருவாய் அமைந்து
பைந்தமிழ் பேசும் பாவனை தந்து
தெள்ளுதமிழ் பாடல் பாடெனப் பணிந்து
மகிழ்த்திடும் பாமாலை பாடவைத்தாயே
கலைமலி நல்லூர் பதியிலே உறையும்
கவிதையாய் அமைந்த வித்தக வேலனே
கவிதை பாடும் பணியினை பணித்து
கவிதனை உன்மேல் பாட வைத்தாயே
எப்படி உரைப்பேன் உனது அழகினை
எப்படி சொல்வேன் உனது புகழினை
நாவலர் பாவலர் பணிந்து போற்றும்
நல்லூர் பதியில் எமை ஆளும் கந்தா
--------------------------------------------------------------
பல்லவி
எல்லையில்லா பெரும் புகழ் கொண்ட நல்லூர் பதியோனே
எப்படிப்பாடுவேன் நினது பெரும் புகழினை
அனுபல்லவி
வெள்ளை உள்ளங்களில் விரும்பியே குடியிருக்கும்
வெற்றி வேலாயுதனே நல்லூர் கந்தா
சரணம்
இலங்கை நாட்டின் வடபால் அமைந்து
பல்லாயிரம் பக்தர்களின் மனங்களில் படிந்து
தாமரையொத்த தளிர்கரங் கொண்ட
வேதமாய் விளங்கும் கருணை முருகனே
-----------------------------------------------------------------
பல்லவி
நினைத்தபோது என் துயர் அகலும்
நீல மயில்மீது பவனி வரும் என் முருகனை
அனுபல்லவி
ஆறு திருமுகமும் பன்னிரண்டு கரம் கொண்டு
ஆறுதலை அளிக்கும் அழகு முருகனை
சரணம்
எல்லையில்லாப் புகழ்கொண்ட நல்லூர் பெருமானே
என்னையும் அறியாது என்னுள் குடி கொண்டாய்
நினது புகழ் பாடும் பலமும் தந்து என்னை
நிந்தாள் பணியும் அறிவினையும் தந்தாயே
வேதமாய் எனது மனதுள் மணம் வீசி
வேலவன் கந்தன் வெந்துயர் தீர்ப்பான்
மந்தகாச புன்னகையோடு மகிமைகள் சேரும்
நல்லூர் பதிவாழ் குமாரா கந்தா
பன்னிரு விழியால் அருள் மழை பொழியும்
பன்னிரு கரங்கொண்ட திருமால் மருகா
சூலாயுதம் கொண்டு சூரன் உடல் கிழித்த
வேலாயுதம் கொண்ட சக்தியின் மைந்தா
------------------------------------------------------------------
பல்லவி
அழகின் உறைவிடமாம் வள்ளிப்பிராட்டிக்கு
பழம் போல் இனித்திடும் பரம தயாளா
அனுபல்லவி
நல்லூர் பதிதனை ஆண்டருள் முருகா
நானிலம் களிப்புற கருணை பொழிந்திடு
சரணம்
வள்ளி தெய்வானை விரும்பிடும் மணாளா
வணங்கிடும் அடியார்க்கு வல்லமை தருவாய்
துள்ளி ஒடுடிடும் மயில்மீது உலாவரும்
துயரம் களைந்டும் தத்துவ வேலா
அன்பிலே உருகி களித்திடும் அடியவர்
இன்புடன் ஓடியே துயர் களைந்திடுவாய்
தேனினும் இனிய தெவிட்டாத் தெய்வமே
நன்னெறிகாட்டி நானிலம் காத்திடு
-----------------------------------------------------------
பல்லவி
சிந்தையிலே வந்து நினது புகழ் பாடவைத்தாய்
செந்தமிழ் தெய்வமாகி நல்லூரில் குடிகொண்டாய்
அனு பல்லவி
திருவிலே சிறந்திட்ட தெய்வீகப் பேரருளே
கருவிலே நினது அருள் கனிந்திடப்பெற்றேனே
சரணம்
குரு வடிவாய்வந்து நினது தோற்றமும் காணப்பெற்றேன்
தருவாய் பெருஞ்செல்வம் தரணியில் நான்வாழ
திருமுறை ஒலியூடு தீபங்களின் ஒளியுடன்
திக்கெட்டும் தெய்வீகம் பரப்பிவரும் பேரொளியே
பல்லாயிரம் துயரமும் பனியாகி நீங்கிடவே
வேலாயுதம் கொண்டு வெவ்வினை நீக்கிடுவாய்
நல்லூர் பெருமானின் புகழ்பாடும் பெரும் பேற்றை
ஆவலுடன் பாடவைத்த நல்லூர் பதியோனே
-----------------------------------------------------------------
பல்லவி
பார்புகழ் நல்லூரில் மையங்கொண்ட முருகனே
கார்மயில் வாகனனே கலியுக தெய்வமே
அனு பல்லவி
கருவிலே என் நினைவில் கருணையுடன் வீற்றிருந்து
மாசில்லாப் பெருவாழ்வு மாண்புடனே அளித்தவனே
சரணம்
சிந்தைநிறை திருவருளும் சிறப்புறு பெரு வாழ்வும்
தந்தையாய் இருந்தெமக்கு தானமாய் தந்திடுவாய்
முந்தை வினை போக்கியே முத்திநெறி காட்டிடுவாய்
எந்தையே உடனிருந்து எம்மையெல்லாம் காத்திடுவீ
தித்திக்கும் தேனமுதே தேவர் பொற்றும் தெய்வமே
தித்திக்கப் பாடிவரின் தெய்வஒளி வீசிடுமே
தித்திக்கும் இனிமையாய் தெவிட்டாப் பெருமகனே
தித்திக்கப் பேசுவோம் திக்கெங்கும் நின் புகழை
---------------------------------------
பல்லவி
தெய்வீக படைத்தலைவா தேவர் மகிழ் கோமானே
மெய்யுருகி பாடுவோற்கு மேன்மை நிலை தந்திடுவாய்
அனு பல்லவி
காலனாய் சூரனுக்கு காட்சி தந்த வள்ளலே
காலடியில் பணிகின்ற பத்தனையே காத்திடுவீர்
சரனம்
நல்லூர் பதியிலே நான்மறைகள் ஓதிவர
பல்கலை அழகுடை தேரிலே பவனி வந்து
நாற்திசையும் துயர் அகல காட்சி தருபவனே
வேற்கை கொண்ட வினை தீர்க்கும் வேலவனே
----------------
நல்லுர் பதியிலே குடியிருக்கும் வேலவா
நானிலம் வாழவே நன்மைகள் செய்திடுவாய்
அனு பல்லவி
அறியாமை இருள் நீக்கும் அறிவின் தெய்வமே
பிறவிப்பேரின்பம் பெரும் பேறாய் தந்திடுவாய்
சரணம்
வேலோடு மயிலுமாய் வீதியிலே பவனி வந்து
வேலாயுதமாக வீற்றிருந்து அருள்பவனே
சேயாய் சிவனுக்கு சிறப்புற அமைந்தவனே
சேமமுற பெருஞ் செல்வம் செம்மையுற தந்திடுவாய்
இலங்கை நாட்டின் இயங்கும் சக்தியாய்
இன்பமுடன் எழுந்தருளும் இளவலே சண்முகா
யாழ்ப்பாண நாட்டிலே யாழிசையின் ஓசையுடன்
ஒங்குபுகழ் நல்லூரில் ஓங்காரமாய் உறைபவனே
----------------------------
மகிழ்வோடு பாடவே மனதார வேண்டினேன்
பாவவினை தீற்கும் பன்னிரு விழியோனே
தேவர் மனங் கவர் தெய்வமே முருகனே
No comments:
Post a Comment